Wednesday, September 2, 2015

இதுவும் மொழி திணிப்புதான்



 பிழைப்புக்காக பிறந்த மண்ணை விட்டு வேற்று மாநிலம் செல்லும் பல இளைஞர்களில் நானும் ஒருவன். பிறப்பாலும் வளர்ப்பாலும் தமிழனான நான், இப்போது ஐதராபாத் நகரில் பிழைத்து வருகிறேன்.

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் இருந்தாலும், இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசுவதில்லை. பூர்வீகத்தினாலோ, மதரீதியாகவோ, பிழைக்க வந்தவர்களாலோ, அரசாங்க நடவடிக்கைகளாலோ, இங்கு இந்தியே அதிகம் பேசப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த என் போன்ற இளைஞர்கள் பாடு திண்டாட்டம் தான். ஆனால் அதை பற்றி குறை சொல்வதற்கில்லை. இதை எதிர் பார்த்தே வேற்றுமொழி பேசும் மாநிலத்திற்கு வந்தவன் நான்.
ஆனால் இங்குள்ள இந்தி திணிப்புதான் என்னை இந்த பதிவை எழுத வைத்தது.

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். அலுவலக நண்பர்களை சந்திக்க/ அவர்களுடன் ஊர் சுற்றி பார்க்க வாடகை மகிழூந்தில் செல்வது வழக்கம். அனைத்து வாகன ஓட்டிகளும் கேட்ட கேள்வி – ‘இந்தி கூட தெரியாதா’. அதிலும் ஒருவர் ‘இந்தியாவில் தானே இருக்கிறாய், ஏன் இந்தி தெரியாது’ என்று கேட்டார். சிறுவயதில் கற்ற இந்தி இதை புரிந்து கொள்ள மட்டுமே உதவியது. என் மனக்குமுறலை வெளிப்படுத்தும் அளவுக்கு எனக்கு இந்தி பரிச்சயமில்லை.

இந்தி கூட தெரியாதா என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?
இந்தி வாழ்க்கைக்கு அவ்வளவு அத்தியாவசியமா என்ன..
இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதுபோல் இவர்கள் சித்தரிப்பதை பார்த்தால், இந்தியாவின் ஒற்றுமை சீர்குழய இம்மாதிரி ஆட்களே போதும் என தோன்றுகிறது.

மொழித்திணிப்பு என்பது அரசாங்கத்தின் வாயிலாகத்தான் நடக்கவேண்டும் என்பதில்லை.
ஒரு மொழியை கற்றால் மட்டுமே நீ உயிர் வாழ முடியும் என்பதைபோல் சித்தரித்து, உளரீதியாக துன்புருத்தி, வற்புறுத்தி, மொழியை கற்கவைத்தால்.. அதுவும் மொழி திணிப்புதானே .. !